search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ பதவி"

    நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என்பது குறித்து எச்.வசந்தகுமார் பதில் அளித்தார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். இந்தநிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதையடுத்து எச்.வசந்த குமார் இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருக்கிறார். எனவே அவர் ஏற்கனவே வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து உள்ளார்.

    இந்தநிலையில் புதிய எம்.பி. யாக தேர்வான எச்.வசந்தா குமார், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று வந்தார். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கன்னியாகுமரி தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றதற்காக எச்.வசந்தகுமாருக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து வெளியே வந்த எச்.வசந்த குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எம்.பி. பதவியை தக்க வைத்துக்கொள்வது என்றும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சபா நாயகர் இருக்கும்பட்சத்தில் நாளைக்கே சென்று எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து, டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறேன்”, என்றார்.

    எம்.எல்.ஏ. பதவியை எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்ய உள்ளதால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது இந்த ராஜினாமாவால் தி.மு.க. கூட்டணியின் பலம் 109 ஆக குறைகிறது. நாங்குநேரி தொகுதியை மீண்டும் தி.மு.க. ஆதரவுடன் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பாக உள்ளது. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் நாங்குநேரியில் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளை தி.மு.க.வும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தி.மு.க.வினர் பேசிக்கொள்கிறார்கள். 
    பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக வசந்தகுமார் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் கூறிய அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றப்படும்.

    பாராளுமன்றத்தில் நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டேதான் இருப்போம். மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் தட்டி கேட்போம். சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்.

    கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜனதாவை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×